உதயநிதி என்ன கஷ்டப்பட்டார்?ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர, உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது..? அடித்து ஆடும் பழனிச்சாமி!
What did Udhayanidhi suffer Apart from being Stalin son what is Udhayanidhi identity Palaniswami is playing with his fists
சென்னை, செப். 2:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுகவும் அதன் தலைமையும் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார்.
கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “என் பஸ்ஸை சுந்த்ரா டிராவல்ஸ் என்று கிண்டல் செய்தார் ஸ்டாலின். உங்களைப் போல ஹெலிகாப்டரில் போக முடியாது. ஏழை, நடுத்தர மக்களை சந்திக்க வேண்டுமென்றால் பஸ்ஸில்தான் வர வேண்டும். விமானத்தில் வந்து மக்களை சந்திக்க முடியாது” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, “ஸ்டாலின் என்ன கஷ்டப்பட்டு முதல்வரானார்? மகன் உதயநிதி என்ன போராட்டம் செய்தார்? சிறை சென்றாரா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதைத்தவிர அவருக்கு என்ன அடையாளம் இருக்கிறது? ஒரு உழைப்பும் இல்லாமல் துணை முதல்வராக உயர்த்திவிட்டார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக “குடும்ப ஆட்சி” கட்சி என்றும், அதிமுக உழைப்பவர்களுக்கு மரியாதை அளிக்கும் கட்சி என்றும் பழனிசாமி வலியுறுத்தினார். “திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்போது இன்பநிதி – வாரிசு அரசியல் மட்டுமே. ஆனால் அதிமுகவில் சாதாரண நபர்கூட உழைப்பால் முதல்வராக முடியும்” என அவர் கூறினார்.
2026 தேர்தல் குறித்து பேசும் அவர், “இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். அதிமுக–பாஜக கூட்டணி அமைந்தவுடன் திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. அடுத்த ஆட்சி அதிமுகவின்தான்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக ஆட்சியை அவர் “ஊழலின் ஊற்றுக்கண்” எனவும், “சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது, போதை விற்பனை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிறுமி முதல் முதியவர் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியில் மக்கள் தாங்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தமிழக நிதிநிலையை எடுத்துக்காட்டிய அவர், “அதிக கடன் வாங்கிய முதல்வர் ஸ்டாலின் தான். 2021 வரை தமிழகத்தின் மொத்தக் கடன் ₹5.15 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியே அதைவிட அதிகமாகக் கடன் எடுத்துள்ளது. வருவாய் அதிகமாக இருந்தும் கடன் எதற்காக?” என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்திய பழனிசாமி, “கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாய் இல்லாமலிருந்தாலும் விலைவாசி உயரவில்லை. ₹40,000 கோடி செலவிட்டு மக்களை காப்பாற்றினோம். அதிமுக ஆட்சி எப்போதும் மக்களுக்காக” என தெரிவித்தார்.
English Summary
What did Udhayanidhi suffer Apart from being Stalin son what is Udhayanidhi identity Palaniswami is playing with his fists