தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதலிடம்; ஆண்டுதோறும் 20,000 பேர் இறப்பு; ஆளுநர் ரவி அதிர்ச்சி தகவல்..!
Governor Ravi revealed the shocking information that Tamil Nadu ranks first in suicides
கோவை மாவட்டம் துடியலுார் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், 'சிந்து சரஸ்வதி நாகரிகம், சிந்து நதி முதல் தாமிரபரணி வரை நாகரிகத்தின் நோக்கும், போக்கும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய நாகரிகம் மிகவும் பழமையானது என்றும், இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைகள், கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட தொன்மையான இந்திய அறிவு மரபை கண்டறிந்து, மொழி பெயர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டின என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியர்கள் மொழி, மண்டலம் உள்ளிட்டவைகளில் நாம் வேறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம் நாட்டின் தத்துவம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,சரஸ்வதி நதி குறித்து ரிக் வேதம் குறிப்பிடுகிறதாகவும், சரஸ்வதி நதி குறித்த செய்திகள் வெறும் புராணமல்ல; அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று தான் என்பது நம் வேதங்களின் அடிப்படை என்று தெரிவித்துள்ளார். ஆனால், இன்று மனிதர்கள் மன அழுத்தத்தாலும், பல்வேறு முரண்பாடுகளாலும் பாதிப்புகளை சந்திப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணத்தில் தகவல் உள்ளது. ஆண்டுதோறும், 20,000 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்கின்றனர் என்று அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியோடு, இழந்த நம் கலாசாரத்தையும், மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து, மீண்டும் மக்களிடம் சேர்க்கும் பணியை செய்து வருகிறதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆரியம் மற்றும் திராவிடத்தை பொய்யான கருத்துகளின் அடிப்படையில் பிரிக்க பார்த்தால், அவர்கள் தோற்று போவார்கள் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
English Summary
Governor Ravi revealed the shocking information that Tamil Nadu ranks first in suicides