டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...? 31-ந்தேதி முக்கிய அறிவிப்பு... வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு...!
Wage hike TASMAC employees Important announcement 31st Strike postponed
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெற இருந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை நிறுவனத்தின் கீழ் செயல்படும் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கடந்த 24-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை எனக் கூறிய தொழிற்சங்க நிர்வாகிகள், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விக்னேஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முக்கிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ள மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, டாஸ்மாக் பணியாளர்களின் ஊதிய உயர்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது அறிவிக்கப்பட்டிருந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Wage hike TASMAC employees Important announcement 31st Strike postponed