பாரத விடுதலைக்காக பலிதானம் தந்த மாவீரனின் பிறந்த தினம் இன்று!!
veerapandiya katabomman birthday
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோல்வியடைந்தார். அதன் பின்னர் திருநெல்வேலி ஆட்சியர் ஜாக்சன், கட்டபொம்மனை கைது செய்ய முயன்றார்.
அவரின் தந்திரத்தை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799-ல் ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு நடந்த போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.
அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799-ல் கயத்தாறு எனுமிடத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மன் இறந்தபிறகு, ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை, பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். அதன்பிறகு பாஞ்சாலக் குறிச்சிக்கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது.
அதன்பிறகு ஆங்கிலேயர்கள் 24.05.1801-ல் கோட்டையை கைப்பற்றினர். அதன்பிறகு ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.
தேச விடுதலைக்காக தன்னுயிரையே விலை கொடுத்து, குடும்பத்தையும் பலிதானம் தந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.
English Summary
veerapandiya katabomman birthday