சட்டசபையில் மாமா-மச்சான் சர்ச்சை... தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு துரைமுருகன் முக்கிய அறிவுரை...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபை நடவடிக்கைகள் குறித்தும், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்தும் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பேசியதாக கூறப்படும் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் காணொளிகளாகவும், குறும்படங்களாகவும் பகிரப்படுவது தொடர்பாக சபாநாயகரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தவெக மற்றும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடையே சட்டசபையில் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சில உறுப்பினர்கள் பேசும் வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது.

அந்த வகையில், தி.மு.க. உறுப்பினர் ஒருவர் பேசியபோது பயன்படுத்திய உறவுமுறை வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டசபையில் “மாமா, மச்சான்” போன்ற உறவுமுறை வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போதைய சட்டசபை நடவடிக்கைகளை பார்க்கும்போது, தானும் மு.க.ஸ்டாலினும் பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுவதாக துரைமுருகன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைமை செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிளைக்கழக செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவியை ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே வகிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் வட்டக்கழகங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநகரம், நகரம் மற்றும் பேரூர் வட்டக்கழக செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களும் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.பேரூர் கழக செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அவரும் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகராட்சிகளில் 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளன. பகுதிக்கழக செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நகரக் கழக செயலாளருக்கும் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. ஒன்றியக் கழக செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் கட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

மாவட்டக் கழக செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், இனிமேல் “மாநகரச் செயலாளர்” என்ற தனிப்பதவி இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்த பின்னர், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் ஒன்றியம், நகரம், பகுதி, வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தலைமைக் கழக பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, புதிதாக பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் பதவியை ஒருவர் 2 முறை மட்டுமே வகிக்க வேண்டும் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவு திருத்தப்பட்டு அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uncle uncle controversy Assembly Duraimurugan important advice DMK MLAs


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->