கன்னியாகுமரியில் ஒரே நாளில் இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!!
two and half tons ration rice seized in kanniyakumari
கன்னியாகுமரியில் ஒரே நாளில் இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!!
கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடத்தலை தடுக்கும் விதமாக குமரி மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் சொகுசு காரில் ஒரு டன் ரேஷன் அரிசி இந்துக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்தக் காரையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து காரை ஒட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த நபர் களியக்காவிளை அருகே ஓட்டமரம் நெடுவிளை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பதுத் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்தனர். இதேபோன்று, கோவளம் கடற்கரைக் கிராமத்தில் இருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக வந்த புகாரின் படி போலீஸார் அங்கு சென்றனர். அங்கு ஒரு சொகுசு காரும், டூவீலரும் நின்றது. அதன் அருகிலேயே மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீஸார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பின்னர் போலீசார் அங்கிருந்த காரை சோதனை செய்ததில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்தக் கார், டூவீலர் மற்றும் ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குமரியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் இருந்து இரண்டரை டன் ரேஷன் அரிசி பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
two and half tons ration rice seized in kanniyakumari