சுற்றுலாப் பயணிகள் வருத்தம்! 5- வது நாளாக ஒகேனக்கலில் குளிக்க தடை...!
Tourists are upset Bathing in Okenakkal banned for 5th day
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கர்நாடகாவின் அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து வந்தது.மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 12000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் , காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 5-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பரிசல் சவாரிக்கு தடை ஏதும் இல்லை. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிப்பால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
English Summary
Tourists are upset Bathing in Okenakkal banned for 5th day