சிறுமி பலாத்காரம் - திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு!
TN Govt appeal in supreme court against former dmk mla release
பெரம்பலூர் தொகுதியில் கடந்த 2006 முதல் முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வேலை செய்து வந்தார். அந்தச் சிறுமியை எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 6 பேர்சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைத்தொடர்ந்து அச்சிறுமி உயிரிழந்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் திறக்கப்பட்ட, எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் புகார் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்குத் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுதலை செய்ததது.
இந்த நிலையில், பெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
English Summary
TN Govt appeal in supreme court against former dmk mla release