நாகர்கோவிலை உலுக்கியுள்ள கைதி மரணம்: உடற்கூறு ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்; சிறைக் காவலர்கள் மூவர் அதிரடி கைது..!
Three prison guards arrested in connection with death of prisoner in court custody
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 09-ஆம் தேதி மதியம் 01.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, போலீசார் சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கடந்த 04 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் சிறை அறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது சபரிவர்மனை போலீஸார் பலமாக தாக்கியுள்ளதாகவும், அவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் கிடையாது எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த பதற்றமான சூழலில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்ற நிலையில், அதன் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கிளைச்சிறையின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
English Summary
Three prison guards arrested in connection with death of prisoner in court custody