நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை; தண்டனையை உறுதி செய்துள்ள உயர் நீதிமன்ற கிளை..!
Nagercoil High Court bench confirms life imprisonment for Kashi
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவன், இளம் பெண்களுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பழகி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களைச் சேகரித்தும், ஆபாசமாகப் படம் எடுத்தும் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டான்.
பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காசிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளதோடு, பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
காசி பழகிய பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றம் ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து காசி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, காசியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
அத்துடன், இளம் பெண்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்றும் தேவையில்லாமல் சமூக ஊடகப் பக்கங்களில் தங்களது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைப் பதிவிடுவதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தற்போதைய சமூக ஊடக உலகில் வாழும் பெண்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற நோக்கில், நீதிமன்ற வரலாற்றில் மிக முக்கியமாக இத்தீர்ப்பினை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Nagercoil High Court bench confirms life imprisonment for Kashi