போலி ரசாயன பால் தயாரித்து விற்பனை: தென்காசியில் மூன்று பேர் கைது..!
Three arrested for producing and selling fake chemical milk in Tenkasi
தென்காசி மாவட்டத்தில் போலியாக பால் தயாரித்து விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலப்பாவூரில் ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகிய 03 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் கெட்டுப்போன அசைவ உணவை உட்கொண்டதில் 'புட் பாய்சன்' ஏற்பட்டதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடந்து தென்காசி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கடந்த ஒரு வருடமாக நாள்தோறும் 1,000 லிட்டர் பால் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன், கெமிக்கல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளதையடுத்து, தென்காசி நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகமது அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளார்.

சோதனையில், ரசாயனத்தில் தயாராகும் பால் பண்ணை நடத்தி வந்த தம்பதி முப்பிடாதி 45 வயது, லட்சுமி 40 வயது, மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரசாயனம் கலக்கப்பட்ட 300 லிட்டர் பாலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Three arrested for producing and selling fake chemical milk in Tenkasi