16 கோடி! 3 மாதத்தில் உடைந்த தி.மலை பாலத்தில் ஊழல் - அறப்போர் இயக்கம் புகார்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டு மூன்றே மாதத்தில் இடிந்து அடித்து செல்லப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட பாலம் கட்டுமானத்தில் நடந்த ஊழல் முறைகேட்டின் மீது விசாரணை கோரி அறப்போர் லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டாமானூர் இடையே செப்டம்பர் 2024 இல் கட்டி முடித்து திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மூன்றே மாதத்தில் டிசம்பர் 3, 2024 அன்று ஏற்பட்ட வெள்ள பெருக்கத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆறு மாத காலம் ஆகியும் இன்றுவரை இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்றைய தினம் இந்த பாலம் வடிவமைப்பு (டிசைன்) மற்றும் கட்டுமானம் குறித்த முறைகேடுகளை புகாராக எழுப்பி இந்த ஊழலின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பாலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இடமும் முதலமைச்சரிடமும் கோரியுள்ளோம்.

அக்டோபர் 2021 இல் அரசாணை எண் 125 மூலம் மாநில நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளரால் ரூபாய் 17 கோடி இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு ஆகஸ்ட் 2022 இல் இந்த பாலம் கட்டுவதற்கான டெண்டர் நோட்டீஸ் மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் செங்கல்பட்டு வட்டம் அதிகாரி வெளியிட்டார். அதில் பாலம் கட்டுவதற்கான டெண்டர் தொகை ரூபாய் 12.98 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

பிறகு பிப்ரவரி 2023 இல் அரசு நிர்ணயித்த ரூபாய் 12.98 கோடி விலையை விட ஏழு சதவீதம் அதிகமாக ரூபாய் 13.94 கோடிக்கு ASR கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 2, 2024 அன்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு அவர்கள் பாலத்தை திறந்து வைத்தார். பிறகு ஃபெங்கல் புயல் ஏற்பட்டு மழை வந்தபோது டிசம்பர் மூன்றாம் தேதி 2024 ல் அதாவது பாலம் கட்டி மூன்றே மாதத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்தப் பாலம் கட்ட அரசு இறுதியாக செலவழித்த தொகை ரூபாய் 15.9 கோடி என்பது தெரிய வந்தது.

மாநில நெடுஞ்சாலைத்துறை IRC (Indian Road Congress) வழிமுறைகளை தான் பின்பற்றுகிறது. அதன்படி ஒரு உயர்மட்ட பாலம் வடிவமைக்கும் பொழுது அதன் வாழ்நாள் நூறாண்டு காலமாக இருக்க வேண்டும். அதேபோல 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் அளவை வைத்தே ஒரு பாலம் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் 1972ல் இந்த ஆற்றின் வழியாக 2,80,000 கன அடி வெள்ளம் கடந்து இருக்கிறது என்பதை 2019ல் பொதுப்பணித்துறை மாநில நெடுஞ்சாலைத் துறை இடம் தெரிவித்தும் அதன் தகவல் வைத்திருந்தும் அதன்படி பாலத்தை வடிவமைக்காமல் குறைந்த அளவான 54000 கன அடி அளவிற்கு இந்த பாலம் வடிவமைக்கப்பட்டது. 

கண்காணிப்பு பொறியாளர் தொழில்நுட்ப காரணங்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் பாலம் 54,000 கன அடிக்கு வடிவமைத்தால் போதும் என்று தெரிவித்தது முதல் முக்கியமான தவறாக உள்ளது. டிசம்பர் 3 2024 இல் வெள்ளம் வந்தபோது ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்றதாக தெரிகிறது ஆகவே விதிகள் படி 100 ஆண்டுகளுக்கான வெள்ள தரவு தகவலை வைத்து பாலத்தை வடிவமைத்து இருந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் வெள்ளம் பாலத்தை கடந்து இருக்க வாய்ப்பு இருந்தது. எனவே இது ஒரு மிகப்பெரிய தவறாகும்.

மேலும் இந்த பாலம் ஒரு வளைவில் கட்டப்பட்டு இருக்கிறது அப்படி எனில் அதற்கான விசைகள் குறித்தெல்லாம் சரியாக நூறாண்டு கால வெள்ள தரவுகளை வைத்து வடிவமைத்து இருக்க வேண்டும். அதற்கான தரவுகள் இருந்தும் கூட அதை புறந்தள்ளி விட்டு வடிவமைத்தது ஒரு மிகப்பெரிய தவறு. பக்கத்தில் உள்ள பாலமும் 54,000 கன அடிக்கு தான் வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு அறிவுபூர்வமான வாதமாக இருக்க முடியாது.

மேலும் எத்தனை நீளத்திற்கு தண்ணீர் செல்ல வழி இருக்க வேண்டும் என்பது 249 மீட்டர் என்று டெண்டர் ஆவணத்தில் கணக்கிடப்பட்டிருக்கிறது ஆனால் அதே டெண்டர் ஆவணத்தில் இறுதி செய்யப்பட்ட தண்ணீர் செல்லும் நீள அளவு 183 மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் தண்ணீர் செல்லும் அளவை குறைத்து பாலத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.

மேலும் இந்த பாலத்தின் அடித்தளம் 4.7 மீட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மீட்டருக்கு மேல் இருப்பது மெதுவான உடைந்த பாறைகள் என்பதால் தேய்த்தல் ஆழம் (scour depth) சரியாக கணக்கிடப்பட்டு செயல்படுத்தப் பட்டதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பாலங்களின் தூண்கள் அப்படியே அடியுடன் சாய்ந்து உள்ளதை பார்க்கும் பொழுது ஆழம் சரியாக கணக்கிடப்பட்டதா என்பதும் கணக்கிடப்பட்ட ஆழம் சரியாக செயல்படுத்தப்பட்டதா என்பதிலும் ஒரு மிகப்பெரிய கேள்வி உள்ளது.

அடுத்ததாக இந்த பாலத்தின் மேலும் கீழும் உள்ள பாலங்கள் நூறாண்டு கால தரவுகள் படி வடிவமைக்காமல் குறைந்த கன அடிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பாலங்கள் இந்த பெருவெள்ளத்தில் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. ஆனால் புதிதாக கட்டி மூன்றே மாதத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் வடிவமைப்பை தாண்டி இந்த பாலத்தின் கட்டுமானத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது.

2015 பெருவெள்ளத்திற்கு பிறகு அடையார் பாலத்தை தாண்டி தண்ணீர் மேலே செல்லும் பொழுது கூட பாலம் அடித்து செல்லப்படவில்லை.

அரசு இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து சூப்பர் செக் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்காமல் இதை ஒட்டுமொத்தமாக மூடி மறைப்பதை பார்க்கும் பொழுது இந்த ஊழல் முறைகேடு கீழ்மட்ட பொது ஊழியர்களில் மட்டுமல்ல மேல்மட்டம் வரை சம்பந்தம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

பாலம் இடிந்து ஆறு மாத காலம் ஆகியும் இன்றுவரை நாம் எந்த நடவடிக்கையும் பார்க்கவில்லை. பால வடிவமைப்பிற்கு பல தரவுகள் கொடுத்த உதவி பொறியாளர் உதவி கோட்ட பொறியாளர் கோட்ட பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜு மற்றும் அதை கள ஆய்வு செய்யாமல் அப்படியே அனுமதித்து தவறான தரவுகளை வடிவமைக்கும் குழுவிற்கு அளித்த தலைமை பொறியாளர் கீதா, கட்டுமானத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான பொது ஊழியர்கள் என இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த துறை அமைச்சர் வேலு மற்றும் செயலர் செல்வராஜ் எதற்காக இந்த முறை கேட்டை மூடி மறைக்கின்றனர்??

17 கோடி ஒதுக்கி 13 கோடிக்கு டெண்டர் போட்டு அதை 14 கோடிக்கு ஒப்பந்ததாரருக்கு கொடுத்து பிறகு 16 கோடி வரை எப்படி செலவழிக்கப்பட்டது? டெண்டர் தொகையை விட 3 கோடி அதிகமாக செலவழித்தும் பாலம் மூன்று மாதங்கள் கூட தாங்கவில்லை. மக்களின் வரி பணமும் வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்டது.

எனவே இந்த ஊழல் முறைகேட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து களத்தில் சூப்பர் செக் மற்றும் ஆய்வு மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முதல்வர் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மக்கள் இழந்த பணத்தை இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அறப்போர் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் முதலமைச்சருக்கும் புகாரை அனுப்பியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvannamalai bridge scam Arappor iyakkam complaint


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->