'இந்தியை கட்டாய மொழியாக்க மாட்டோம் என எழுத்துப்பூர்வ உத்தரவிடவில்லை என்றால் போராட்டம் தொடரும்': ராஜ் தாக்கரே எச்சரிக்கை..!
Raj Thackeray warns that the protest will continue if there is no written order that Hindi will not be made a mandatory language
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு மாநில பள்ளி பாடத்திட்டத் திட்டத்தின்படி, இந்தி மூன்றாவது கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்தி பாடப்புத்தகங்கள் அச்சிடப்படத் தொடங்கின.
அம்மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக, முதல் வகுப்பு தொடக்கம் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை (மராத்தி, ஆங்கிலம், இந்தி) கட்டாயமாக்குவது குறித்து பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் குரல் எழுப்பியுள்ளது.

அத்துடன், மாநில அரசின் மும்மொழி திட்டம், இந்தி மொழி திணிப்பு போன்றவை பொது மக்களிடையே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறித்த எதிர்ப்பின் விளைவாக, மகாராஷ்டிரா மாநில அரசு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து இருந்தது. ஆனால், இந்த முடிவை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வ உத்தரவு வெளியிடப்படவில்லை என்பதால், இவ்விவகாரம் அங்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதாஜி புஸ்ஸேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘முதல் வகுப்பு முதல், மராத்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், இந்தி கட்டாய மூன்றாவது மொழியாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தி பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருப்பதாகவும், அரசு தனது முடிவை மாற்ற முயல்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தங்கள் மொழி அடையாளத்தைப் பாதுகாக்க மற்ற மாநிலங்கள் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதைப் போல, மகாராஷ்டிராவும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், எங்களது கட்சி ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கும் என்றும், இந்தப் போராட்டங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Raj Thackeray warns that the protest will continue if there is no written order that Hindi will not be made a mandatory language