EWS இடஒதுக்கீட்டில் குளறுபடி..தலைமைச் செயலாளரை திரும்பப் பெற பொதுநல அமைப்புகள் வலியுறுத்தல்!
There is a loophole in the EWS reservation Public welfare organizations urge to withdraw the Chief Secretary
உதவியாளர் தேர்வில் EWS இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்து அதிக பணியிடங்கள் ஒதுக்கி SC, ST, OBC, MBC, EBC, BCM, BT மக்களுக்கு எதிராக செயல்படும் தலைமைச் செயலாளரை திரும்பப் பெற வேண்டும்- பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி'க்கு மாநில தகுதிக் கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு ரயிலில் செல்லும்போது புதுச்சேரி அரசு உதவியாளர் (Assistant) பணி நியமனத்தில் EWS இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து தேர்வுப் பட்டியல் வெளியிட்ட தகவல் கிடைத்தது.
இதுகுறித்து டெல்லி செல்லும் ரயிலிலேயே பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் 26/06/2025, காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்காணும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேற்படி, கூட்டத்தில் புதுச்சேரி அரசு உதவியாளர் (Assistant) பணி நியமனத்தில் EWS இடஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
EWS இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த 2019ஆம் ஆண்டுக்கு முன் 2012ஆம் ஆண்டு முதல் காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு EWS இடஒதுக்கீடு மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.
அதாவது பொதுப் பிரிவுக்கு (General Quota) வரவேண்டிய பணியிடங்கள் EWS இடஒதுக்கீட்டு பிரிவுக்குச் சட்ட விதிகளுக்கு முரணாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. காலம் காலமாக இருந்து வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.
இந்நிலையில், கடந்த 24/06/2025 அன்று உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டது. அதில் EWS இடஒதுக்கீட்டு குளறுபடிகளைச் சரி செய்யாமல் பொது பிரிவுக்கு வரவேண்டிய பணியிடங்களைச் சட்ட விதிகளுக்கு மாறாக EWS இடஒதுக்கீட்டு பிரிவுக்குத் தாரை வார்க்கப்பட்டு உள்ளது. மேலும், இத்தேர்வில் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 23 பேர் EWS இடஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ஒரே பகுதியை சேர்ந்த 23 பேர் இடஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்டது சட்ட விதிமீறல் நடந்துள்ளதை உறுதிசெய்கிறது. மேலும், EWS பிரிவுக்குக் கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கியது இடஒதுக்கீட்டுப் பயனைப் பெறும் SC, ST, OBC, MBC, EBC, BCM, BT மக்களுக்கு எதிரானது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் EWS இடஒதுக்கீட்டு குளறுபடிகளைச் சரி செய்த பின்னர் உதவியாளர் (Assistant) பணியிடங்கள் தேர்வு செய்யவேண்டும் என்று குறிப்பு (Note) அனுப்பியதை, ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி தேர்வுப் பட்டியல் வெளியிட்டதற்கு தலைமைச் செயலாளர் திரு. சரத் சவுகான், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்புச் செயலர் திரு. ஜெய்சங்கர் ஆகிய இருவர் மட்டும்தான் முழுக்காரணம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர் அனுப்பிய குறிப்பை (Note) அலட்சியப்படுத்தியதோடு, நிராகரித்தது சட்ட விதிகளுக்கு முரணாக தலைமைச் செயலாளர் திரு.சரத் சவுகான் உள்ளிட்ட உயர் ஜாதி அதிகாரிகளின் ஆணவப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தலைமைச் செயலாளர் திரு சரத் சவுகான் அவர்கள் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், புதுச்சேரி மக்களின் நலனுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே, தலைமைச் செயலரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மாநில தகுதி கேட்டு டெல்லி போராட்டம் முடிந்து புதுச்சேரி திரும்பியவுடன் பொதுநல அமைப்பின் சார்பில் இது குறித்து தீவிரமான போராட்டம் முன்னெடுக்கப்படும்.
English Summary
There is a loophole in the EWS reservation Public welfare organizations urge to withdraw the Chief Secretary