வறுமையில் கூலித்தொழிலாளியாக பணி.. படித்து அரசு ஆசிரியராக தேர்ச்சி...! ஐ.ஏ.எஸ் ஆக வாழ்த்துக்கள்.!!
Theni Kumuly Near Tamilnadu - Kerala Border Tribal Village Woman Selvamari Now Teacher Training IAS
வறுமையிலும் ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி படித்து வந்த பெண்மணி, அரசுப்பள்ளி ஆசிரியையாக தேர்வாகியுள்ளார். மேலும், விரைவில் நான் ஐ.ஏ.எஸ் பணியாற்றுவதற்கு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள தேனி மாவட்ட குமுளி அருகேயுள்ள பட்டியலின மக்கள் வாழும் கிராமத்தை சார்ந்தவர் எஸ். செல்வமாரி (வயது 28). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த செல்வமாரியின் தாய் ஏலக்காய் தோட்ட பணியாளர்கள் ஆவார்கள். வீட்டில் செல்வமாரியுடன் 3 பிள்ளைகள் இருக்க, அவரின் தந்தை சிறுவயதிலேயே குடும்பத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் தாயார் செல்வம் மற்றும் பாட்டி பேச்சியம்மாள் அரவணைப்பில் செல்வமாரி மற்றும் அவரது உடன்பிற சகோதர-சகோதரிகள் வாழ்ந்து வந்துள்ளனர். வறுமையின் பிடியில் தத்தளித்த குடும்பத்தில் செல்வமாரி நன்றாக படிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் பல தடைகளை கடந்து தொடர்ந்து பயின்று வந்துள்ளார்.
தனது குடும்பத்தினருக்கும் கல்விப்படிப்பே பெரும் உயர்வை தரும் என்பதை உணர்த்திய செல்வமாரி, தனது குடும்ப சூழ்நிலை மற்றும் தாயின் ஆலோசனையை ஏற்று ஏலக்காய் தோட்டத்தில் தொழிலாளராக பணிக்கு சேர்ந்து பின்னர் கிடைக்கும் நேரங்களில் படித்து வந்துள்ளார். காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்லும் செல்வமாரி, மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு வருவார். அவரின் ஊதியம் ரூ.150 மட்டுமே. தனது கனவை நனவாக்க, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு சென்று படிக்க தொடங்கியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற செல்வமாரி, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தோட்டங்களுக்கு சென்று பணியாற்றி வந்துள்ளார். பள்ளியில் படிக்கும் நேரத்திலேயே படிப்பில் சகலகலா வல்லவியாக திகழ்ந்து வந்த செல்வமாரி, ஆசிரியர்களின் அன்பை பெற்ற மாணவியாகவும் இருந்து வந்துள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 ஆவது மாணவியாகவும் அவர் இருந்து வந்துள்ளார். மேல் படிப்புக்காக திருவனந்தபுரம் பெண்கள் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி பயில தொடங்கிய நிலையில், அங்கு தமிழ் மாணவர்கள் சொற்ப அளவே இருந்தது அவருக்கு பெரும் தடையாக இருந்துள்ளது. இது போதாதென்று அண்டை மாநிலம் என்பதால் மொழி பிரச்சனை மற்றும் கேலி என படிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கல்லூரி படிப்பே வேண்டாம் என்று தனிமைப்படுத்திக்கொண்டு தாயிடம் கூறவே, முதலில் மகள் கூறிய அதே அறிவுரையை மீண்டும் மகளுக்கு தாய் கூறி படிப்பின் முக்கியத்தை உணர்த்தியுள்ளார். பின்னர், கிடைத்த தமிழ் மாணவ நண்பர்களுடன் விடுதியறையில் தங்க தொடங்கி, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தனது கனவை நனவாக்க தொடங்கியுள்ளார். மேலும், வீட்டில் இல்லாத வசதி, படிக்கும் சூழல் விடுதியில் அதிகம் கிடைத்ததால் ஊருக்கு வராமல் படித்துள்ளார்.
தான் வேலை பார்த்து சம்பாரித்த பணம், அரசின் சலுகை உதவி என இறுதியாக இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எட்., எம்.எட்., பட்டங்களை பயின்றுள்ளார். படிப்பை முடித்ததும் கேரளாவின் பொது சேவை ஆணைய தேர்வுக்கு தயராகிய செல்வமாரி, இரண்டு முறை தேர்ச்சியடைந்து கேரள காவல்துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், சில காரணத்தால் காவல்துறை வேலையில் சேர முடியவில்லை. இந்த நிகழ்வு கடந்த 2013 ஆம் வருடம் நடைபெற்றது. பின்னர், கடந்த 2017 ஆம் வருடம் மீண்டும் கேரளா பொதுசேவை ஆணைய தேர்வை எழுதி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் உயர்க்கல்வி பள்ளியில் ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் சேர்க்கைக்கு தற்காலிக தடை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் இடுக்கியில் உள்ள வஞ்சிவாயால் அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர ஆணை வந்துள்ளது. தற்போது, குமுளி பஞ்சாயத்தில் உள்ள சோத்துப்பாறை கிராமத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள இடுக்கி வஞ்சிவாயால் அரசு பழங்குடியினர் பள்ளியின் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வறுமை, மொழி பிரச்சனை, உள்ளூர் பிரச்சனை என பல துன்பங்களை கடந்து சாதித்து இருக்கிறார். மேலும், ஆசிரியர் என்பதை தாண்டி அவர் ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
ஆசிரியர் செல்வமாரியின் கனவுகள் விரைந்து நனவாக மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Theni Kumuly Near Tamilnadu - Kerala Border Tribal Village Woman Selvamari Now Teacher Training IAS