புதுப்பெண் தற்கொலை..மகளின் உடலை கண்டு பெற்றோர் கதறி துடித்த சோகம்!
The suicide of a young girl Parents are devastated upon seeing their daughters body
அவிநாசியில் புதுப்பெண் காரில் தென்னை மர பூச்சிமருந்து உட்கொண்டு தற்கொலை செய்த சம்பவத்தில், காரில் இருந்து ரிதன்யாவின் உடலை மீட்க்கும் போது அவரது தாயாரின் கதறல், கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (53) என்பவரின் மகளான ரிதன்யா திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில் அவிநாசியை அடுத்து மொண்டிபாளையம் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலமாக, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், தன் சாவிற்கு தனது கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் காரணம் என்று உருக்கமாக பேசிய ஆடியோவை அனுப்பி உள்ளார்.
இதையடுத்து சேயூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் மூன்றாவது குற்றவாளியான மாமியார் சித்ராதேவியின் உடல்நலம் ஒத்துழைக்காததால் "பைண்டிங் ஆர்டர்" என்ற முறையில் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார், என்ற தகவலை அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட பின்பு காரிலிருந்து அவரது உடலை மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் தனது மகளின் உடலை கண்டு அவரது தாயார் ஜெயசுதா, கதறி துடித்து அழுகும் காட்சி கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
The suicide of a young girl Parents are devastated upon seeing their daughters body