'வரி பாக்கி 20 கோடியை செலுத்தாவிட்டால் முடக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும்'; வருமான வரித் துறை..!
The Income Tax Department says that legal action will be taken to auction off Jayalalithaa's frozen assets if the outstanding tax dues are not paid
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், குறித்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு வாரிசான தீபக்கும் சேர்க்கப்பட்டார்.
குறித்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் படியும் உத்தரவிட்டிருந்தது.
தற்போது வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2026 ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 09 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 08 லட்சத்து 08 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் 06 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித் துறை பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சில சொத்துகள் முடக்கப்பட்டன. இவ்வாறு வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, மீண்டும் பிப்ரவரி 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
English Summary
The Income Tax Department says that legal action will be taken to auction off Jayalalithaa's frozen assets if the outstanding tax dues are not paid