நெல்லையில் பயங்கரம்..! குடிநீர் குழாய்கள் கொழுந்துவிட்டு எரிந்து தீ விபத்து...! - 4 கி.மீ தூரத்திற்கு பரவிய கரும்புகை...!
Terror in Nellai Water pipes burst and caught fire Black smoke spread 4 km
நெல்லை பொதிகை நகர் அருகே குடிநீர் திட்டப் பணிகளுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி.பி. குழாய்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது.மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் பணிகளுக்காக பொதிகை நகர் அருகே ஏராளமான ஹெச்.டி.பி. குழாய்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று திடீரென அந்த குழாய்களில் தீப்பற்றியது.கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால், ஏராளமான குழாய்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. தீயின் வெப்பம் அதிகரித்த நிலையில், குழாய்களில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறத் தொடங்கியது.
தீப்பிடித்த குழாய்களில் இருந்து எழுந்த கரும்புகை காற்றில் வேகமாக பரவி சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதிகை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், பொதுமக்களும் புகையை சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வேகமாக பரவி எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
குழாய்கள் தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால், தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதில் சவால் ஏற்பட்டது. இருப்பினும், நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீ எவ்வாறு பற்றியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Terror in Nellai Water pipes burst and caught fire Black smoke spread 4 km