பெரியபாளையம் அருகே பயங்கர விபத்து...! ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு...!
Terrible accident near Periyapalayam 3 members same family killed when lorry collided auto
பெரியபாளையம் அருகே கோவிலுக்கு வழிபாடு செய்ய ஒரே ஆட்டோவில் சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத விதமாக நேர்ந்த சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டி வந்த இவர், தனது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோருடன் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

லோகநாதன் ஆட்டோவை ஓட்டிச் சென்ற நிலையில், பன்பாக்கம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. மோதலின் வேகத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.விபத்தில் ஆட்டோவில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தின் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். பின்னர் அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மருத்துவமனையில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இதனால் கோவில் வழிபாட்டுக்காகச் சென்ற குடும்பத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.விபத்தில் காயமடைந்த லோகநாதன், அவரது மகள் தனலட்சுமி மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து பெரியபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விபத்துக்கான காரணம், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த பூங்கொடி, ராதா மற்றும் கோகுல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.கோவில் வழிபாட்டுக்காக மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஒரே குடும்பத்தினர் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி, 3 உயிர்கள் பறிபோன சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Terrible accident near Periyapalayam 3 members same family killed when lorry collided auto