4-வது பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி முடிவு...! ரூ.1 லட்சத்துக்கு விற்ற பெற்றோர் கைது...!
Shocking result after birth 4th baby girl Parents arrested selling her 1 lakh
திருப்பத்தூரில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நான்காவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தியடைந்த பெற்றோர், குழந்தையை மற்றொரு தம்பதியினருக்கு பணத்துக்கு விற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா-ஹவாமா தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தியடைந்த தம்பதியினர், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த செய்யது–சம்ரின் தாஜ் தம்பதியினர் குழந்தையை வாங்குவதற்காக திருப்பத்தூர் வந்துள்ளனர்.திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், அந்தத் தம்பதியினர் ரஹ்மத்துல்லா–ஹவாமா தம்பதியினரிடம் இருந்து பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக ஆம்பூர் அருகே உள்ள உமராபாத் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.விசாரணையின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படும் ரஹ்மத்துல்லா-ஹவாமா தம்பதியினரும், குழந்தையை வாங்கியதாக கூறப்படும் செய்யது-சம்ரின் தாஜ் தம்பதியினரும் என 4 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவமனை ஊழியர்கள், இடைத்தரகர்கள் அல்லது வேறு நபர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை பணத்துக்காக கைமாறியதாக வெளியாகியுள்ள இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking result after birth 4th baby girl Parents arrested selling her 1 lakh