பட்டியலின உள்ஒதுக்கீடு விவகாரத்தால் வெடித்த மோதல்; மத்திய பாஜக அரசின் ஒரே கூட்டணியில் உள்ள இரு அமைச்சர்கள் பரஸ்பரம் பதவி விலகக் கோரி சவால்..!
Conflict between Union Ministers Chirag Paswan and Jitan Ram Manjhi over the issue of intra caste reservation
மத்திய அமைச்சர்களான சிராக் பஸ்வான் மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி இடையே, பட்டியலின உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இருவரும் பரஸ்பரம் பதவி விலகக் கோரி சவால் விடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு பலன்கள் சென்றடையும் வகையில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்தது.
இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் மகனுமான சந்தோஷ் குமார் சுமன் இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், பட்டியலின உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், ''பட்டியலினத்தில் உள்ள 22 சாதிகளில் 18 சாதிகளை உள்ளடக்கிய மகாதலித் பிரிவை உருவாக்கியதன் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை; பீகாரில் 4 சதவீத மக்கள் தொகை கொண்ட முசாஹர் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட மாவட்ட கலெக்டராகவோ, போலீஸ் சூப்பிரண்டாகவோ வர முடியவில்லை ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.
சந்தோஷ் குமாரின் இந்த கருத்துக்கு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், ''பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு மற்றும் கிரீமிலேயர் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று ஜிதன் ராம் மாஞ்சியும் அவரது மகனும் விரும்பினால், முதலில் அவர்கள் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்; ஏனெனில் அவர்கள்தான் முதலில் கிரீமிலேயர் வரம்பிற்குள் வருவார்கள்.'' என்று சுட்டிக்காட்டி ஆவேசமாக பேசினார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, ''சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களின் நலன்களைக் காக்கவே உள்ஒதுக்கீடு அவசியமாகிறது; ஏழைகளின் நலனில் துளியும் அக்கறை இல்லாத சிராக் பஸ்வான்தான் தனது ஒன்றிய அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று பதிலடி கொடுத்து பேசினார்.
மத்திய பாஜக அரசின் ஒரே கூட்டணியில் உள்ள இரு அமைச்சர்களின் இந்த பகிரங்க மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Conflict between Union Ministers Chirag Paswan and Jitan Ram Manjhi over the issue of intra caste reservation