“கடவுள் இல்லை என்ற திமுக கையில் கோவில்கள்”.. அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வாருங்கள்! கொந்தளித்த எச்.ராஜா!
Temples in the hands of DMK which says there is no God Hindus should take to the streets against the Charities Department H Raja is furious
தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் அனைத்தும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், அறநிலையத்துறை மீது இந்துக்கள் வீதிக்கு வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று நம் கோவில்கள் நம்மிடம் இல்லை, திமுக ஆட்சிக் கையில் உள்ளன. கடவுள் இல்லை என்று சொல்வது திமுக, ஆனால் 40,000 இந்து கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கோவில்களில் உள்ள உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்கிறது. ஆனால் கோவில்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டுகிறது. பூசாரிகளுக்கு தரவேண்டிய சம்பளம் உரிய முறையில் வழங்கப்படவில்லை.
திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. உதாரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகப் பணியில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துவிட்டன. தமிழகத்தில் 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், திமுக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு கூட இந்துக்களின் காணிக்கை பணத்தில்தான் நடத்தப்பட்டது. அதற்கான கணக்கையும் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறான சூழலில், கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதேசமயம், கோவில்களின் கணக்கு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று ஐகோர்ட் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், “கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் எத்தனை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன? எத்தனையவை பதிவேற்றம் செய்யப்படவில்லை? தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன?” என்பதை அறநிலையத்துறை ஆணையர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Temples in the hands of DMK which says there is no God Hindus should take to the streets against the Charities Department H Raja is furious