டாஸ்மாக் விவகாரம் - அமலாக்கத்துறை முன்பு டாஸ்மாக் துணை மேலாளர் ஆஜர்.!!
tasmac deputy manager appears before enforcement
தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் படி சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம், 'டாஸ்மாக்' அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையின் படி ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது. அதன் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில் டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
tasmac deputy manager appears before enforcement