சென்னையில் போலீஸ் விசாரணைக்கு பின் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் தாக்கியதாக உறவினர்கள் பகீர் புகார்!
Suspicious Death of Youth Following Police Inquiry in Chennai Relatives Allege Custodial Torture
சென்னையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் ஒருவர், வீட்டிற்குத் திரும்பிய நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்; இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் (28) ஒரு டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் அவர் தேவையில்லாமல் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூப்பாண்டித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெங்கடேசனைப் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்குப் பின்னர், போலீசார் வெங்கடேசனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். பெற்றோரிடம் மன்னிப்புக் கடிதம் போன்ற ஒரு உறுதிமொழிக் கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டு, வெங்கடேசனை அவர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்குச் சென்ற வெங்கடேசன் தனது அறையில் உறங்கச் சென்றார். ஆனால், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதவைத் திறந்து பார்த்தபோது அவர் அசைவற்று கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த ஊழியர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது, வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைக் கேட்டு விரைந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார், வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் மரணமடைந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் வெங்கடேசனைத் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போலீஸ் விசாரணையின் போது நடந்த அத்துமீறல் காரணமாகவே இந்த மர்ம மரணம் நிகழ்ந்ததாகக் கூறி அவர்கள் நீதி கேட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் தெரியவரும்.
English Summary
Suspicious Death of Youth Following Police Inquiry in Chennai Relatives Allege Custodial Torture