ஐஐடி இயக்குநர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என்று சர்ச்சையாக பேசிய பிரியங்கா காந்தி; 215 கல்வியாளர்கள் கடிதம் வெளியிட்டு கண்டனம்..!
215 academics issue letter condemning Priyanka Gandhi for controversial remarks about IIT Director Kamakoti
மக்களவையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து 215-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து பிரியங்கா காந்திகு எதிராக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய பிரியங்கா காந்தி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை 'கோமிய நிபுணர்' என்று கிண்டலடித்து விமர்சித்து இருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், நாலந்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சச்சின் சதுர்வேதி, நிதி ஆயோக் முன்னாள் தலைவர் ராஜீவ் குமார், யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் டி.பி. அகர்வால் உள்ளிட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்கள் நாகரிகமாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், இந்தியாவின் முதல் தொழில்முறை நுண்செயலி உருவாக்கத்தில் முக்கியப் பங்கும் வகித்த ஒரு கல்வியாளரை, அரசியல் கேலிக்காக இத்தகைய சொல்லாடல்களால் குறிப்பிடுவது இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தைக் குறைப்பதாக அமையும் என கல்வியாளர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி 2025-இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேராசிரியர் காமகோடி, பசு கோமியத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்துப் பேசியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலளித்திருந்த காமகோடி, அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையிலேயே தாம் பேசியதாக குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
English Summary
215 academics issue letter condemning Priyanka Gandhi for controversial remarks about IIT Director Kamakoti