கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர்... யார் இவர்?
suratha birthday 2019
சுரதா:
கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.
பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.
செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 2006ஆம் ஆண்டு மறைந்தார்.