#நாகப்பட்டினம் || தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்.!! இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.!
Sri Lankan pirates continue to attack nagapattinam fishermen
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரணியத்தில் இருந்து தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆழ்கடலில் மீன் பிடிக்க நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். ஒரு படகில் அருள் பாண்டி, கண்ணன், சாமிநாதன், பிரதீபன் ஆகியோரும், மற்றொரு படகில் வைத்தியநாத சுவாமி, ராமராஜன், செல்வராஜன் ஆகியோர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதிவேக இன்ஜின் பொருத்திய படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் வைத்தியநாதன் இருந்த படகை சூழ்ந்து கொண்டு செல்போன், வாக்கி டாக்கி, 20 லிட்டர் டீசல், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு இவர்களை விரட்டியடித்துள்ளனர்.

மற்றொரு படகில் இருந்த 200 கிலோ மீன்பிடி வலை வெட்டி எடுத்ததோடு தமிழக மீனவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீதமிருந்த வலையை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்ய கரைக்கு திரும்பிய நிலையில் கடலோர காவல் குழும போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட மீனவர்கள் குமுறுகின்றனர். தொடர் தாக்குதலால் இன்றோடு 2வது நாளாக ஆற்காட்டுத்துறை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sri Lankan pirates continue to attack nagapattinam fishermen