50% வரி எதிரொலி - தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு.!!
sea foods export stop for 50% tax
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதன் படி கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.60 ஆயிரத்து 523 கோடி மதிப்பிலான 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில், அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.20 ஆயிரத்து 892 கோடி மதிப்பிலான 3 லட்சத்து 29 ஆயிரத்து 192 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக கடந்த 2023-24-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 214 கோடி மதிப்பிலான 73 ஆயிரத்து 822 டன் கடல் உணவு பொருட்கள், கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா திடீரென இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளதனால் கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு குறித்து அமெரிக்காவுக்கு கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படும் டி.எஸ்.எப். கடல் உணவு ஏற்றுமதி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளதாவது:- "இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் 50 சதவீதம் வரி விதிப்பு கடல் உணவு ஏற்றுமதியை மிகவும் பாதித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் காரணமாக அமெரிக்காவில் இந்திய கடல் உணவு பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது.
ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டது. மீன்களை வாங்கி இருப்பு வைப்பதும் குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்கள் தேங்கும் நிலை உருவாகிவிட்டது. கடல் உணவுகளை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க முடியாது. இதே நிலை நீடித்தால் கடல் உணவு நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும். இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
sea foods export stop for 50% tax