வக்பு திருத்த சட்டத்திற்கு தடை ..நீதிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
Restriction on the property reform act A huge victory for justice
ஒன்றிய பாஜகவின் வக்ஃப் திருட்டுச் சட்டம் - 2025ற்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை வரவேற்கிறோம். இது சனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது,
இதுகுறித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் செ. ஹைதர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய பாஜகவின் பாசிச அரசு, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை வஞ்சிப்பதையே தனது அன்றாட செயலாக வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முஸ்லிம்கள் அறப்பணிகள் செய்வதைத் தங்களின் இறை கடமைகளாக எண்ணி, இறையில்லங்களுக்குக் கொடைகளாகக் கொடுத்த சொத்துக்களைத் திருடும், கெட்ட எண்ணத்துடன்வக்பு திருட்டுச் சட்டம் 2025ஐ தனக்கான எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியது.
இந்தியாவின் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, இந்த திருட்டுச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தனது முஸ்லிம் வெறுப்பை நிலைநிறுத்தியது பாசிச பாஜக. சனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்திய அரசியல் சாசனத்திற்கு இந்த சட்டம் இருப்பதை எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து வக்ஃப் திருட்டுச் சட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு, ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சம்மட்டி அடியாக உள்ளது. இது சனநாயகத்தின் அடிப்படை கூறுகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் நிலைநிறுத்தியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு கொண்ட தீர்ப்பாக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ஒன்றிய அரசின் வக்பு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்காலத் தடையானது, இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு நீதியாக உள்ளது. குறிப்பாக, ஒரு வக்பு சொத்து அரசாங்கத்திற்குச் சொந்தமானதா என்பதை மாவட்ட ஆட்சியரே தீர்மானிக்கலாம் என்ற சட்டப் பிரிவுக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது தனிநபர் சொத்துரிமைகளை ஒரு நிர்வாக அதிகாரியின் கைகளில் ஒப்படைக்கும் அதிகார அத்துமீறலைத் தடுத்து நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
அதேபோல், ஒரு வக்ஃபை உருவாக்க, சம்பந்தப்பட்ட நபர் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் தனிப்பட்ட மத உரிமைகளில் தலையிடும் ஒன்றிய பாசிச அரசின் முஸ்லிம் விரோத முயற்சியை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது .
இந்த வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கும், உச்ச நீதிமன்றத்தில் தங்களின் வாதங்களை சிறப்பாக எடுத்து வைத்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்களுக்கும் எங்களின் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கும், அதன் சட்டப்பூர்வ உரிமைகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக இதைக் கருதுகிறோம். எதிர் காலங்களில் நமது உரிமைகளை பாதுகாக்க நாம் அனைவரும் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதுடன், நமது வக்ஃப் சொத்துக்களின் ஆவணங்களை முறைப்படுத்தி வைப்பதுடன், தேர்தல் காலத்தில் மிக நுட்பமாக செயல்பட வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் செ. ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
English Summary
Restriction on the property reform act A huge victory for justice