இயல்பு நிலைக்கு திரும்பிய ராமேஸ்வரம்; தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: பாதிக்கப்பட்ட மீன்பிடி தொழில்..!
Rameswaram returns to normal
நமது அண்டைய நாடான இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயலின் தாக்கம் வடா தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
இந்நிலையில், இன்று கடல் சீற்றம் குறைந்து வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் 04 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. பலர் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் சிரமமின்றி புனித நீராடினர். குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி இன்று 02-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மோட்டார், ஜேசிபி உதவியுடன் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், 'டிட்வா' புயல் காரணமாக மீன்பிடிக்க தடை தொடர்ந்தும் விதிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு செல்லவில்லை. வங்கக் கடலில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும், கடல் சீற்றத்திற்கு வாய்ப்புள்ளதாலும் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இன்றும் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் ரூ.10 கோடிக்கு மேலாக மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டபம் மீனவர்களும் கடலுக்கு செல்லாததால் படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நேற்று மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rameswaram returns to normal