கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி; ஆனாலும் பயணிகள் அவதி..!
Tourists allowed back in Kodaikanal
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர்.
டிட்வா புயல் காரணமாக கொடைக்கானலில் கடந்த -3 நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களும், பேரிஜம் ஏரி வனப்பகுதியும் நேற்று முன்தினம் மூடப்பட்டது.
விடுமுறை நாளான நேற்றும் அங்கு சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி நட்சத்திர ஏரியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம்களில் படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலைகொடைக்கானலில் காற்றின் வேகமும், மழையும் குறைந்துள்ளது. இதன்காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
நேற்று அங்கு பெய்த மழையால் முக்கிய மலைச் சாலையான கோஷன் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்துள்ளது. இப்பகுதி பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்லக்கூடிய பிரதான மலைச் சாலையாகும். இதனால், வாகனங்கள் இருபுறமும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
English Summary
Tourists allowed back in Kodaikanal