தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rainfall Predicted in Tamil Nadu Weather Department Update
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது. மேலும், வடக்கு தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு:
இன்று (மே 14): தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 15): நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
மே 16: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 17 முதல் மே 19 வரை: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20: தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் நிலவரம்:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 35°C வரையிலும், குறைந்தபட்சமாக 28-29°C வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளது. மழையின் போது இடி மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
English Summary
Rainfall Predicted in Tamil Nadu Weather Department Update