கன்னியாகுமரி: ரயில்வே ஊழியர் ரயில் பெட்டியில் தூக்குபோட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை
Railway employee suicide in the train in kanniyakumari
கன்னியாகுமரியில் ரயில்வே ஊழியர் ரயில் பெட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரம் நேதாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (54). இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சாமிநாதன், இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் அனைத்து இடங்களிலும் சாமிநாதனை தேடினர்.
ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கில் பிணமாக தொங்குவதாக ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமிநாதன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Railway employee suicide in the train in kanniyakumari