ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் தடை: தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவு..!
Private companies are also ordered to set up automatic milk vending machines in Ooty and Kodaikanal
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, பாலை விநியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று வழியை கண்டறியுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனையைத் தடுக்கும் வகையில், தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில், ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையின் படி, ஆவின் பால் விநியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சோதனை அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த இயந்திரங்களை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொடைக்கானலில் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் அளவுக்கு பால் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஊட்டியில் 06 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இருந்து தானியங்கி பால் விற்பனை இயந்திரம் குறித்து முறையாக விளம்பரங்கள் செய்யப்படவில்லை என தெரிய வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போதுமான விளம்பரங்களைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், தானியங்கி பால் விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாக்கெட் மூலம் பால் விற்பனை செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன்,தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
English Summary
Private companies are also ordered to set up automatic milk vending machines in Ooty and Kodaikanal