காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: போடியில் சோகம்..!
Pregnant woman who married for love in Bodi commits suicide by hanging herself
போடியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சக்திவேல் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், இவர்களது 02-வது மகள் ரேணுகாதேவி வயது 26. இவர் உறவினரான கூலித்தொழிலாளி ஆயுத்ராஜ் என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால், இதற்கு தாய் ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 19-ஆம் தேதி போடி அருகே தீர்த்ததொட்டி முருகன் கோயிலில் ரேணுகாதேவி மற்றும் ஆயுத்ராஜ் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் மதுரையில் வசித்து வந்த நிலையில், ரேணுகாதேவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து தம்பதியர் மதுரை வீட்டை காலி செய்துவிட்டு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு போடி அருகே ரெங்கநாதபுரத்தில் குடியேறியுள்ளனர். அத்துடன், போடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே இருவரும் சேந்து இட்லி கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கர்ப்பிணியான ரேணுகாதேவி தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தாய் ராஜேஸ்வரி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து எஸ்.ஐ.க்கள் விஜய், மலைச்சாமி ஆகியோர் கர்ப்பிணி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காதல் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்து ரேணுகாதேவி தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
Pregnant woman who married for love in Bodi commits suicide by hanging herself