ஹைதராபாத்தில் H-FAST தனிப்படை அதிரடி சோதனை; பொதுமக்கள் உயிருடன் விளையாடும் 122 டன் கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல்..!
122 tons of adulterated food items seized in H FAST special forces raid in Hyderabad
ஹைதராபாத் நகரில் கலப்பட உணவுகளுக்கு எதிராகப் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். அதில், கடந்த 100 நாட்களில் மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 122 டன் ஆபத்தான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து, ஹைதராபாத் காவல்துறையின் கீழ் இயங்கும் 'ஹெச்-பாஸ்ட்' (H-FAST) என்ற தனிப்படை இந்த அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த சோதனையின் போது 27 டன் கலப்பட இஞ்சி-பூண்டு விழுது, கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 25 டன் பழங்கள், 30 டன்னுக்கும் அதிகமான கோழி இறைச்சிக் கழிவுகள், பழைய ஊறுகாய்கள், போலி டீ தூள் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பன்னீர் உள்ளிட்ட ஏராளமான சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து கூறியுள்ளதாவது;
உணவு கலப்படம் என்பது ஏதோ ஒரு சாதாரண விதிமீறல் அல்ல என்றும், பொதுமக்கள் உயிருடன் விளையாடும் இத்தகைய செயல்களைத் தங்களின் காவல்துறை 'கொலை முயற்சிக்குச் சமமான குற்றமாகவே' கருதுகிறது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த கலப்பட மாஃபியா கும்பல் மீது கடுமையான குண்டாஸ் சட்டம் பாயும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உணவு கலப்படம் குறித்து ஏதேனும் சந்தேகம் அடைந்தால், உடனே 'டயல் 100' அல்லது 8712661212 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
122 tons of adulterated food items seized in H FAST special forces raid in Hyderabad