தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே, வன்னியர்களுக்கான 20 % இடஒதுக்கீடு போராட்டம்... மருத்துவர் இராமதாஸ், அன்புமணி பேச்சு.!
PMK Revokes Vanniyar Reservation issue with Full Energy
20% தனி இட பங்கீடு போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் இணையவழியில் 22 - ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மருத்துவர் இராமதாஸ், மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர் இராமதாஸ் மற்றும் அன்புமணி இராமதாஸ் இறுதி உரையாற்றனார்.
இதன்போது பேசிய மருத்துவர் இராமதாஸ், " கடந்த 87 ஆம் வருடத்தில் நான் போராட்டம் நடத்தினேன். இன்று போராட்டத்தை அன்புமணி இராமதாஸ் நடத்துவார். எனக்கு பாளையங்கோட்டை சிறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையாக உள்ளது. அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும் போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 1988 ஆம் வருடத்தில் வேங்கட சுப்பிரமணியம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அதனை நீக்கிவிட்டார். அவரிடம் பலமுறை நான் கெஞ்சியும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர்களின் எண்ணிக்கை தெரிந்துவிடும் என்று வேண்டும் என்றே கலைஞர் இதனை செய்யவில்லை. கடந்த 1987 ஆம் வருடம் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு போராடினோம். ஆனால், நியாயப்படி 25 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்க வேண்டும். கலைஞர் எம்.பி.சி பிரிவு அறிவித்தவுடன், அழுகிய மாங்கனி என்று தெரிவித்தேன்.
இன்று தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கையாக, சுவையுள்ள சேலத்து மாம்பழத்தை வழங்குமாறு கோரிக்கை வைக்கிறேன். போராட்டத்தை நிறுத்துவது உங்களின் கைகளில் உள்ளது. 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி, இந்த சமூகத்தை முன்னேற்ற உதவி செய்யுங்கள். வன்னியர் சமுதாயம் கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே தமிழகம் முன்னேற்றமடையும்.
கடந்த 1987 போராட்டத்தில் சிறிய குழந்தைகளாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இன்று வயதாகிவிட்டாலும் அதே துடிப்புடன் இருக்கின்றனர். இதனை மக்களின் கோரிக்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். சுக்கா?.. மிளகா?.. சமூகநீதி? புத்தகத்தில் உள்ள 51 ஆவது அத்தியாயத்தை அனைத்து சமூக மக்களுக்கும் விநியோகம் செய்தாலே, மக்களுக்கு வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அநீதி தெரியவரும் " என்று தெரிவித்தார்.
இதன்போது பேசிய அன்புமணி இராமதாஸ், " வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் ஜாதிக்கான பிரச்சனை இல்லை. இது வளர்ச்சிக்கான பிரச்சனை. தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தென் தமிழகம் கல்வி ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளது. வட தமிழகம், முதன்மை நகர் சென்னை போன்ற பகுதிகளில் வளர்ச்சி இல்லை.
மக்களும் இதனை தமிழகத்திற்கான பிரச்சனையாக கருதினால் மட்டுமே வளர்ச்சி கிடைக்கும். இந்த போராட்டம் துவங்கப்படுவதன் உண்மையான நோக்கமே தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் நடத்த வேண்டும். வன்னியர்கள் இல்லாத பகுதிகளிலும் போராட்டம் நடைபெற வேண்டும். மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த உண்மை சென்றடைய வேண்டும்.
மருத்துவர் இராமதாஸ் அருந்ததியர், இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என பலருக்கும் இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விஷயத்தில் அவரை ஏமாற்றிவிட்டனர். எங்களின் வாதத்தை அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றாத பட்சத்தில், எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். உணர்வுபூர்வமான விஷயத்தை அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அரசு மனது வைத்தால், வன்னியர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க இயலும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
PMK Revokes Vanniyar Reservation issue with Full Energy