ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா - குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வாய்ப்பு.!
Online Gambling Prohibition Bill Chance to send to President
தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சியின் ஒப்புதலோடு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த மசோதாவை நான்கு மாதங்கள் கழித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது கூடியுள்ள தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமையன்று தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்டத்துறைக்கு சட்டசபை செயலகம் நேற்று அனுப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த மசோதா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஒரு சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதாக ஆளுநர் ஏற்கனவே கூறியிருப்பதால், இந்த மசோதாவை அவர் குடியரசுதலைவருக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Online Gambling Prohibition Bill Chance to send to President