ஒரு உயிர் பல உயிர்களுக்கு...! – விவசாயி ஈசுவரனின் உறுப்பு தானம் 6 பேருக்கு புதியவாழ்வு...!
One life for many lives Farmer Easwarans organ donation gives new life 6 people
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கீழக்கூடலூரைச் சேர்ந்த 55 வயதான விவசாயி ஈசுவரன், கடந்த 29-ம் தேதி வயல் வேலைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகினார். கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.
பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தபோதும், ஈசுவரன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

“ஈசுவரனின் உயிர் போனாலும், பலருக்கு புதிய உயிர் தரட்டும்” என்ற எண்ணத்தில் அவரது குடும்பம் மனமுவந்து ஒப்புதல் அளித்தது.அதன்படி, அரசு மருத்துவர்கள் குழு சிறப்பாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை வெற்றிகரமாக அகற்றினர்.
பின்னர், இதயம் மற்றும் நுரையீரல் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்குக் கடத்தப்பட்டன.
மற்றொரு சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.மனிதத்தன்மையின் உயிரோவியமாக திகழ்ந்த ஈசுவரனின் உடல் உறுப்பு தானம் மூலம் ஆறு பேருக்கு புதிய உயிர் கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
English Summary
One life for many lives Farmer Easwarans organ donation gives new life 6 people