சென்னையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
new low pressure area has formed in the southwest Bay of Bengal
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், அது எதிர்பாராத விதமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இந்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதுடன், அடுத்த 36 மணி நேரங்களில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த மண்டலத்தின் தாக்கம் தமிழகத்தையும் புதுச்சேரியையும் மழையால் பாதிக்கக்கூடும். இதனால் இன்று (அக். 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
new low pressure area has formed in the southwest Bay of Bengal