கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு என்ஜினீயர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
near kanchipuram engineer arrested for bribe
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை காஞ்சிபுரத்தை அடுத்துள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த அரசு வாகனங்களுக்கான உதிரிபாக கடையை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு உரிமம் புதுப்பிப்பதற்காக அந்த பழுதுநீக்க பணிமனையின் அலுவலக உதவி என்ஜினீயர் மோகனை அணுகினார்.
அதற்கு அவர் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் உரிமத்தை புதுப்பிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேசனிடம் கொடுத்து அதனை என்ஜினீயர் மோகனிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
அதன்படி வெங்கடேசன், பணிமனை மையத்திற்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளர் முரளியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அதனை பொறுப்பாளர் முரளி என்ஜினீயர் மோகனிடம் கொடுத்துள்ளார்.
இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சென்று மோகன் மற்றும் முரளியை கையும் களவுமாக கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பணத்தை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near kanchipuram engineer arrested for bribe