உதயநிதி ஸ்டாலின் கட்சியின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டார் - அமைச்சர் எ.வ.வேலு.!
minister velu press meet in perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
"தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டார்.
மக்கள் மத்தியில் அவரது பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த இரண்டு தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். அவருடைய சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் மிகவும் தேவை.
பெரம்பலூர் மாவட்டம் முதல் அரியலூர் மாவட்டம் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கான ஆய்வு முடிந்ததும் சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும், 69 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இந்த பணிகள் கடந்த மே மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
minister velu press meet in perambalur