சென்னையில் கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்க வில்லை - அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.!
minister subramaniyan visit in Rainwater drainage works
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தக் கனமழையால் புளியந்தோப்பு கே.பி.பூங்கா சந்திப்பு, பட்டாளம், வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் இரவே இந்தப் பகுதிகள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள விருகம்பாக்கம் டபுள் டேங்க் சாலை மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள ராஜ மன்னார் சாலையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, "இரண்டு வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விடா முயற்சியால் ஆறே மாதங்களில் நிறைவடைந்துள்ளன. அதில் 400மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலை மாறியுள்ளது.
இதையடுத்து, குடிசை பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கும் உத்தவிட்டிருக்கிறோம். சென்னையில் மழை நின்ற பின்பு 200 மருத்துவ முகாம்களை கொண்டு வட்டத்திற்கு ஒன்று என்று நடத்துவதற்கும் முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டை போல் சென்னையில் இந்தாண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை.
மேலும், ஏரி, குளம் என்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பெரிய அளவில் வடிகால் அமைக்கப்பட்டதால் தான் மழைநீர் தேங்கவில்லை. வடகிழக்கு பருவமழை பாதிப்பு இல்லாத சென்னை என்கிற வகையில் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
minister subramaniyan visit in Rainwater drainage works