தென்னக ரெயில்வே நடத்திய தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - மதுரை எம்பி கண்டனம்!
Madurai MP Condemn to Railway exam tamil
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தென்னக ரெயில்வே நடத்திய தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆகஸ்ட் 10, 2025 நடைபெற்ற தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தேர்வில் கேள்வித்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வழக்கப்படி மாநில மொழியுடன் மூன்று மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்பட வேண்டிய நிலையில், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தமிழுக்கு எதிரான புறக்கணிப்பாகவும், மொழி உரிமையை மீறும் செயல் என்றும் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுத் துறைகள் அடிக்கடி இந்தி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதேசமயம், மாநில மொழிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது வெளிப்படையாகும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ் கேள்வித்தாளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, ரெயில்வே துறையின் மொழி சார்ந்த அணுகுமுறை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
English Summary
Madurai MP Condemn to Railway exam tamil