கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம் - தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
madurai high court order to tn govt for paddy bags damage case
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழகத்தில் பெய்த பருவ மழையால், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அதற்கான அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கிடங்கிகள் மற்றும் பாதுகாப்பு மையம் என்று எதுவும் இல்லை. இதனால், நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால், அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அந்த மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விக்டோரியா கவுரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "பல்வேறு மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன.
அந்த இடங்களில் எல்லாம் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கு குறித்த விசாரணை ஒத்திவைத்தனர்.
English Summary
madurai high court order to tn govt for paddy bags damage case