கட்டுமான பணிகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் - சி.எம்.டி.ஏ. நிபந்தனை..!
Lands provided for construction work
சென்னை பெருநகர் பகுதியில் சாலை வலைப்பின்னல் திட்டத்தில் உள்ள, 201 கிராமங்களில் மேற்கொண்டு வரும் கட்டுமான திட்டங்களுக்கு, புதிய நிபந்தனை விதிக்கப்படுவதால் கட்டுமான பணிகள் மேற்கொள்வதறக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னை புறவழி சாலை, வெளிவட்ட சாலை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சாலைகளை ஒட்டிய பகுதிகளில், சாலை வசதி மேம்பாட்டுக்கான வலைப்பின்னல் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் முறையாக விரிவாக்கப்படுவது, தேவையான இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்படுவதற்காக, சாலை வலைப்பின்னல் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
இதற்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள, திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்வி நிறுவனத்தின் மூலம், 29 கிராமங்களுக்கும், சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்வி நிறுவனத்தின் மூலமாக, 24 கிராமங்களுக்கும் சாலை வலைப்பின்னல் வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக, 2019ல் சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்ததையடுத்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்வி நிறுவனத்தின் மூலம், 148 கிராமங்களுக்கு சாலை வலைப்பின்னல் வரைவு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு, 2021ல் சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மூன்று திட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 201 கிராமங்களில் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய சாலைகள் வர வேண்டிய இடங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய இடங்கள் என அனைத்தும் வரையறுக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், இப்பகுதிகளில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது, இந்த வரைபடத்தின் அடிப்படையில் உரிமையாளர்கள் தேவையான நிலங்களையும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. கட்டுமான துறையினர் சி.எம்.டி.ஏ.,வின் இந்த நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
English Summary
Lands provided for construction work