உலக புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி தமிழர் எம் எஸ் சுவாமிநாதன் காலமானார்!
India's eminent agricultural scientist M S Swaminathan passes away
இந்தியாவின் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் காலமானார். சென்னையில் காலை 11.20 மணியளவில் காலமானார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. 1925 இல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த அவருக்கு 98 வயதாகிறது. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்றும் இவர் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மருத்துவர் சாம்பசிவன் - பார்வதி தங்கம்மாள் இணையருக்கு மகனாக 1925, ஆகஸ்ட் 7-இல் பிறந்தார் சுவாமிநாதன். சுவாமிநாதன் 11 வயதாக இருக்கும்போது அவரது தந்தை மறைந்தார். அதையடுத்து அவரது மாமாவான எம்.கே.நாராயணசாமியால் வளர்க்கப்பட்டார். சுவாமிநாதன் மருத்துவராக வேண்டும் என்று அவரது குடும்பம் விரும்பியது.
ஆனால் நாட்டில் நிலவிய பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்த சுவாமிநாதன், உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாயத் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் (2007-2013), தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் (2004-2006) இருந்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, உலகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் 38 கௌரவ முனைவர் பட்டங்களை அளித்துள்ளன. இந்திய அரசின் பத்மஸ்ரீ (1967), பத்மபூஷண் (1972), பத்மவிபூஷண் (1989) உள்ளிட்ட 40-க்கு மேற்பட்ட விருதுகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார். அவருடைய மனைவி கடந்த வருடம் 88 வயதில் காலமானார். தலைவர்கள் பலரும் தற்போது தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
India's eminent agricultural scientist M S Swaminathan passes away