வழிபாட்டு தலங்களில் அரைகுறை ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!
In places of worship, a ban should be imposed on inadequate clothing AIADMK insists
புதுச்சேரியை ஆன்மீக சுற்றுலா தளமாக மாற்றுவோம் என கூறியுள்ள துணைநிலை ஆளுநர் இந்து, கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலங்களில் ஆடை கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் தெரிவிக்கையில்:மக்களுக்கு அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் இலவச அரிசி ஒரு கிலோ 47.70 கொள்முதலில் 15 ரூபாய் கமிஷனாக மாண்புமிகு முதல்வர் மற்றும் துறை அதிகாரிகள் பெறுவதாக திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். அதே போன்று ஒரு கிலோ அரிசியில் 7 ரூபாய் கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.வைத்தியலிங்கம் எம்பி அவர்களும் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு மாறுபட்ட கமிஷன் தொகையை இவ்விரு கட்சிகளும் கூறுவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் குழப்பத்தை தீர்க்க திமுகவின் எதிர்கட்சி தலைவர் திரு.சிவா அவர்களும், திமுகவின் பிரதான கூட்டணி கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் திரு.வைத்திலிங்கம் எம்.பி அவர்களும் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சிவில் சப்ளை அமைச்சராக இருந்த கந்தசாமி ஒரு சேர அமர்ந்து பேசி தங்களது ஆட்சியில் எவ்வளவு கமிஷன் பெற்றோம், தற்போது எவ்வளவு பெறுகிறார்கள் என்பதை கமிஷன் தொகையில் வித்தியாசம் இன்றி தெரிவிக்க வேண்டும்.
திரு.வைத்திலிங்கம் எம்.பி அவர்கள் முதல்வராக இருந்த போது அரிசியில் கமிஷன் பெற்று தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக அவரின் வீட்டு முன்பு சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர் பெற்ற கமிஷன் தொகை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வர் நாராயணசாமியும், உணவுத்துறை அமைச்சர் கந்தசாமியும் அரிசியில் கமிஷன் பெறுகிறார்கள் எனக்கூறி அப்போதைய துணைநிலை ஆளுநர் திருமதி.கிரண்பேடி அவர்கள் அரிசி போடுவதையே நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக வங்கியில் பணம் போட உத்தரவிட்டார்கள்.
அப்போது இவர்கள் பெற்ற கமிஷன் எவ்வளவு என்பதையும் கூற வேண்டும். அதன் அடிப்படையில் தற்போதைய அரசு எவ்வளவு கமிஷன் பெறுகிறார்கள் என்பதை வாய்க்கு வந்தபடி வித்தியாசத்துடன் தெரிவிக்காமல் சரியாக தெளிவுபடுத்தினால் மக்களின் குழப்பம் தீரும். பல விஷயங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி ஆளும் அரசுக்கு திமுகவும், காங்கிரசும் துணை போகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள் சைபர் க்ரைம் பிரிவு அலுவலகத்திற்கு கௌரவ தலைவராக செயல்பட்டு வருகிறார். உண்மை நிலை என்னவென்று தெரியாமல் சிவா பேசி வருகிறார். குறிப்பாக விளம்பரத்தில் நடித்த இரண்டு தமிழ் நடிகைகளுக்கு சைபர் க்ரைம் சம்மன் அனுப்ப வேண்டும் என்று மிகப்பெரிய கோரிக்கையை முன்எழுப்பினார். அவரது கௌரிக்கையை ஏற்று தற்போது அந்த இரண்டு நடிகைகளுக்கும் சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சைபர் க்ரைம் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்கள் அதிகமாக பேராசை பிடித்தவர்களாகவும், குறுக்கு வழியில் அதிகமாக சம்பாதிக்க முடியுமா என்று எண்ணம் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற மோசடியில் அதிகபட்சமாக அரசு ஊழியர்கள் ஏமாறுகின்றனர். அவர்களுக்கு கோடி கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்பதை முதலில் விசாரிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே சைபர் குற்றச்செயல் அதிகம் நடக்கும் மாநிலம் புதுச்சேரி தான்.
புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் பிரிவை டிஜிபி அவர்கள் உருவாக்க வேண்டும்.
டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் இணைந்து மத்திய சைபர் பிரிவு உதவியை பெற வேண்டும் மேலும் புலனாய்வு திறமை பெற்ற 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி விசாரணையை தீவிரபடுத்த வேண்டும்.
துணைநிலை ஆளுநர் ஆன்மீக சுற்றுலா தளமாக புதுச்சேரியை மாற்றுவோம் என கூறியுள்ளார். இந்து, கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலங்களில் ஆடை கட்டுப்பாட்டை துணைநிலை ஆளுநர் அவர்கள் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இதுபோன்ற வழிபாட்டு தலங்களில் அரைகுறை ஆடைகளுடன் உள்ளே வரும் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
In places of worship, a ban should be imposed on inadequate clothing AIADMK insists