காஞ்சிபுரத்தில் வெறிநாய் கடித்த மாணவன்; 03 மாதங்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்கி பரிதமாக உயிரிழப்பு..!
In Kanchipuram a student died after contracting rabies 3 months after being bitten by a rabid dog
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 வயது மாணவன் ஒருவர், நாய் கடித்து 03 மாதத்திற்கு பிறகு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சபரிவாசனுக்கு 15 வயது. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 09-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 03 மாதத்திற்கு முன்பு சபரிவாசன் வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் இருந்த வெறிநாய் ஒன்று அவரை கடித்துள்ளது. அப்போது சபரிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. நாய் கடித்ததை தந்தையிடம் தெரிவித்தால் திட்டுவார் என்று பயத்தில், அதனை கூறாமல் மறைத்துள்ளார்.

ஆனால், தனது பாட்டியிடம் தெரிவித்த போது மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாமல் நாய் கடித்த இடத்தில் பச்சிலை மூலிகையை கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சபரிவாசனின் உடல்நிலை மோசமாகியுள்ளதோடு, அவரது நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சபரிவாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
English Summary
In Kanchipuram a student died after contracting rabies 3 months after being bitten by a rabid dog