'நிதானம் இல்ல.. ஆனா வண்டிய ஓட்டுவேன்'...! - காவல் ரோந்து வாகனத்தை கடத்திச் சென்று ரகளை செய்த போதை ஆசாமி...!
I dont have any sobriety but Ill drive car Drug addict hijacks police patrol vehicle and causes chaos
சென்னையின் பெரியமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ராஜ்குமார், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் காவல்துறை வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த கடைக்குச் சென்றனர்.

அந்த நேரத்தில், திடீரென சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் இயங்கத் தொடங்கும் சத்தம் கேட்க, இருவரும் அவசரமாக திரும்பி வந்தனர். அவர்கள் கண் முன்னரே, மர்ம வாலிபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை கைப்பற்றி வேகமாக அங்கிருந்து பறந்துசென்றார்.
சில நிமிடங்களுக்குள், கடத்தப்பட்ட அந்த ரோந்து வாகனம் ராஜீவ் காந்தி மருத்துவமனை சிக்னல் அருகே நின்றிருந்த ஒரு வாடகை காரில் மோதியதில் கடுமையான விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சீர்குலைந்து பெரும் குழப்பம் நிலவியது.விபத்தை ஏற்படுத்திய வாலிபர் தப்பிச் செல்ல முயன்றபோது, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை மடக்கிப் பிடித்து பெரியமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் மூலம், அந்த வாலிபர் லிஜோ ஜோசப் (30) என்பதும், கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.
லாரி ஓட்டுநராக பணிபுரியும் அவர், சம்பவம் நிகழ்ந்த வேளையில் மது போதையில் இருந்ததாகவும், சாவியுடன் இருந்த காவல்துறை வாகனத்தை கவனித்த அவர், அதனை திடீரென எடுத்துச் சென்று கட்டுப்பாடின்றி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
English Summary
I dont have any sobriety but Ill drive car Drug addict hijacks police patrol vehicle and causes chaos